'பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாகவே இருந்து வருகின்றது'

'பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாகவே இருந்து வருகின்றது'

இலங்கைக்கு தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாகிஸ்தான் உறுதுணையாகவே இருந்து வருகின்றனது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் இலங்கை அரசாங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் நெருக்கமான, நல்லுறவு மற்றும் பரஸ்பர  உறவுகளைப் பேணிவருகின்றன. அவை பரந்த அடிப்படையிலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை" என அமைச்சர் மேலும் கூறினார்.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் பாகிஸ்தானின் 81ஆவது தேசிய தின வரவேற்பு நிகழ்வில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக்,

"1948ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து  பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான சகோதரத்துவத்தின் அடித்தளம் அமைத்தார்.

இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து காணப்படுகிறது. இந்த உறவானது  பௌத்த  மற்றும் இஸ்லாம் மதங்கள்  போதிக்கும் உலகளாவிய அமைதி மற்றும் அன்பினால் இன்னும் வலுப்பெற்றுள்ளன" என்றார்.

பிராந்திய பாதுகாப்பு நிலைமை பற்றி இந்த நிகழ்வில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் நடைபெற்ற போதிலும், பாகிஸ்தான் விவேகமும்  தீவிர கட்டுப்பாடும் உள்ள  ஒரு பொறுப்புள்ள நாடாக செயற்பட்டுள்ளது. அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம்இருதரப்பு மற்றும் பிராந்திய மோதல்களையும் அமைதியான முறையில் தீர்க்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஆதரிக்கின்றது.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் பாராட்டிகின்றேன்" என்றார்.

பாகிஸ்தான் அரசு, கொழும்பிலுள்ள அதன் உயர் ஸ்தானிகராலயம் மூலம் இலங்கை மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் 1,000 புலமைப்பரிசில்களை வழங்க உள்ளதாக மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது சாத் கட்டாக் இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக பாகிஸ்தான் காம்சாட் பல்கலைக்கழக அனுசரணையுடன், இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் மேகொள்ளப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.