தெஹிவலை பாபக்கர் பள்ளிவாசலை பதிவுசெய்ய வக்பு சபை தீர்மானம்

 தெஹிவலை பாபக்கர் பள்ளிவாசலை பதிவுசெய்ய வக்பு சபை தீர்மானம்

சர்சைக்குரிய தெஹிவலை பாபக்கர் பள்ளிவாசலை பதிவுசெய்ய வக்பு சபை கடந்த புதன்கிழமை  (29) தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை உறுப்பினர்களை நியமிப்பதற்காக விசாரணைகளை முன்னெடுக்கவும் வக்பு சபை தீர்மானித்துள்ளது.

குறித்த பள்ளிவாசல் பதிவு தொடர்பான விசாரணை நேற்று வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி மொஹைதீன் ஹுசைன் தலைமையில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் சட்டத்தரணி றுதானி சாஹீர் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தொழுகை இடம்பெற்று வருகின்ற இப்பள்ளிவாசலை வக்பு சபையில் பதிவுசெய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த பள்ளிவாசலின் ஜமாத்தினர் மேற்கொண்ட அயராத முயற்சியின் காரணமாகவே தற்போது இப்பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இப்பள்ளிவாசல் பதிவுசெய்யப்படாமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, இப்பள்ளிவாசல் அமையப் பெற்றுள்ள 77 பேர்ச் காணி, பாபக்கர் ட்ரஸ்டின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.