இந்திய உயர் ஸ்தானிகராலய செயலகம்சார் பணியாளருக்கு கொவிட்-19 தொற்று

இந்திய உயர் ஸ்தானிகராலய செயலகம்சார்  பணியாளருக்கு கொவிட்-19 தொற்று

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் செயலகம்சார் இந்திய  பணியாளர் ஒருவருக்கு நேற்று (13) சனிக்கிழமை கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த பணியாளர், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ மையம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த உத்தியோகத்தரின் குடும்ப அங்கத்தவர்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தரின் கடமைகளுக்கு அமைவாக அவர் பெரும்பாலான உயர் ஸ்தானிகராலய பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்பினைக் கொண்டிருக்கும் அதேவேளை, உத்தியோகபூர்வ பணிகள் நிமித்தம் வெளியாட்களுடன் தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

ஆனாலும் உயர் ஸ்தானிகராலயத்தில் குறித்த உத்தியோகத்தரின் முதல் தொடர்பாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன்  நிர்ணயிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நியமங்களுக்கு அமைவாக முற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனர்.

உயர் ஸ்தானிகராலய வளாகம் தொற்று நீக்கப்பட்டிருக்கும் அதேவளை உரிய நெறிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் - 19 நிலைமை காரணமாக உயர் ஸ்தானிகராலயம் குறைந்த வலுவுடன் இயங்கிவரும் அதேவேளை சுழற்சி முறையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

வினைத்திறன் மிக்க வகையில் கொவிட் 19க்கு எதிராக போராட இலங்கைக்கு சகல சாத்தியமான வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.