RTI ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு எதிராக கடற் படைத் தளபதி மனுத் தாக்கல்

RTI ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு எதிராக கடற் படைத் தளபதி மனுத் தாக்கல்

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

இம்மனுவின் மேன் முறையீட்டு பிரதிவாதியாக ஊடகவியலாளர் றிப்தி அலியும் இணைக்கப்பட்ட பிரதிவாதிகளாக தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி சித்தி றிஸ்னி பிர்தௌஸ் மற்றும் அவரது உதவியாளர்கள் ஆஜராகவுள்ள இந்த மனு, கடந்த 2023.10.02ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் பிரதி மேன் முறையீட்டு பிரதிவாதிக்கு கடந்த ஜுலை 15ஆம் திகதியே மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதியினால் இந்த ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட 2023/17ஆம் இலக்க மேன் முறையீட்டினை விசாரணை செய்து தள்ளுபடி செய்யுமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேன் முறையீட்டு பிரதிவாதியினால் கோரப்பட்ட தகவலை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ)(i)ஆவது பிரிவின் வழங்க முடியாது என கடற் படையின்  தகவல் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை உறுதிப்படுத்துமாறும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2023ஆம் ஆண்டு ஜுலை மாதம் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கு முன்னர் கடற் படைக்கு சொந்தமான கப்பலில் சில நாட்கள் தங்கியிருந்தார். இது தொடர்பான விடயங்களை கோரி ஊடகவியலாளர் றிப்தி அலியினால் கடந்த 2022.09.01ஆம் திகதி கடற் படையிடம் தகவல் கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5(1)(ஆ)(i)ஆவது பிரிவின் கீழ் குறித்த தகவல் கோரிக்கை கடற் படையின் தகவல் அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டது.

இதற்கு எதிரான கடற் படையின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டுக்கு எந்தவித பதிலும் கிடைக்காமையினால்  தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேன் முறையீடு செய்யப்பட்டது.

ஆணைக்குழுவின் நீண்ட விசாரணையின் போது கடற் படையினால் எழுத்து மூலமும் வாய் மொழி மூலமும் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.

எவ்வாறாயினும் தகவல் கோரிக்கையாளரின் எட்டு கோரிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதியின் பயணத்திற்காக கடற் படைக்கு எவ்வளவு செலவு ஏற்பட்டது?, அதற்கான கட்டணத்தினை செலுத்தியவர் யார்? மற்றும் எப்போது செலுத்தினார்? என்ற இரண்டுக்கு கோரிக்கைகளுக்கு மாத்திரம் பதலளிக்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது.

"அரசின் பாதுகாப்பை அல்லது அதன் ஆள்புல இறைமையை அல்லது பந்தோபஸ்தை பாதிக்ககூடும்" என்ற எல்லைக்குள் குறித்த இரண்டு கோரிக்கைகளும் உள்ளடங்காது எனவும் ஆணைக்குழுவின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இத்தீர்ப்பிற்கு எதிராகவே கடற் படையின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் அதன் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.