'உள்ளுராட்சி மன்ற பட்டியல் உறுப்பினர்களின் கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும்'

'உள்ளுராட்சி மன்ற பட்டியல் உறுப்பினர்களின்  கால எல்லை உறுதிப்படுத்தப்பட வேண்டும்'

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மேலதிக பட்டியலின் ஊடாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளுக்கு உத்தியோகபூர்வ கால எல்லை தொடர்பாக உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"உள்ளூராட்சி மன்ற புதிய தேர்தல் சட்டத்தின் மூலமாக  உள்ளூராட்சி மன்றங்களுக்கு கடந்த காலங்களை விட அதிகமான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் வட்டார ரீதியாகவும், நேரடியாகவும் தேர்தலில் போட்டியிட்டும் அதேநேரம் அந்தக் கட்சிகள் பெறக்கூடிய வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் மேலதிக பட்டியல் ஊடாகவும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதி நிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு மேலதிக பட்டியலின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்படுகின்ற பிரதிநிதிகளை வருடாவருடம் விலகக்கூறி புதிய உறுப்பினர்களை நியமிக்கின்ற ஒரு செயற்பாடுகளை சில கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பின்பற்றி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இதன் காரணத்தினால் வருடாவருடம் பிரதிநிதிகள் மாற்றப்படுகின்றனர். குறிப்பிட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியெற்படுகிற அதேவேளை உள்ளூராட்சி மன்ற சட்ட திட்டங்களையும், முழுமையான அனுபவத்தினையும் பெற முடியாதவர்களாக அந்த உறுப்பினர்களின் நிலை காணப்படுகின்றது.

இந்த செயற்பாட்டின் ஊடாக முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு ஒன்றுமில்லை. எனவே  தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய்கின்ற போது தேசியப்பட்டியலின் ஊடாக நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ கால எல்லைகள் தொடர்பாக ஆராய்வது மிக முக்கியமான விடயமாக இருக்கின்றது.

அரசியலில் பெண்கள்  பிரதி நிதித்துவத்தை அதிகரிப்பதுடன், கட்சிகள் ஜனநாயகத்தை பின்பற்றுகின்ற செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும்.  தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற செயற்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க  மற்றும் அமைச்சர் தாரக பாலசூரிய,  தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் பிரதிநிதிகள் ஏனைய சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட துறைசார் நிபுணர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது" என்றார்.