போத்தலில் சிறுநீர் கழிக்கும் றிசாத் பதியுதீன்

போத்தலில் சிறுநீர் கழிக்கும் றிசாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியூதீன், தினந்தோறும் பி.ப 5.00  மணிக்குப் பின்னர், போத்தலிலேயே சிறுநீர் கழிக்கும் விடயம் இன்று (07) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் வெளியானது.

இதனை எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வெளியிட்டார். விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டிருக்கும் றிசாத் பதியூதீன், பி.ப 5.00 மணிக்குப் பின்னர் மலசலக்கூடத்துக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் பி.ப 5.00 மணிக்கு பின்னர், போத்தலிலே முன்னாள் அமைச்சர் றிசாத் பதியூதீன் சிறுநீர் கழிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் தாங்களும் இவ்வாறே சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு, பி.ப 5.00 மணிக்கு பின்னர் போத்தல்களிலேயே சிறுநீர் கழித்ததாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இதற்கு பதிலளித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் றிசாத் பதியூதீன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.