இலங்கை மக்களுக்கு வழங்க உலக உணவுத் திட்டத்திடம் சவூதியினால் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

இலங்கை மக்களுக்கு வழங்க உலக உணவுத் திட்டத்திடம்  சவூதியினால் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தினால் இலங்கையின் பல பிராந்தியங்களில் விநியோகிப்பதற்கு தேவையான 300 தொன் பேரீச்சம்பழங்களை உலக உணவுத் திட்டத்திடம் இன்று செவ்வாய்கிழமை (11) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை குடியரசிற்க்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச உணவுத் திட்டத்தின் துணைப் பணிப்பாளர் / ஜெரார்ட் ரெபெல்லோ மற்றும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் பின் அப்துல்லா அல்-கலாஃப் போன்றோர் பங்கேற்றனர் .

உலக உணவுத் திட்டமானது இப்பேரீத்தம் பழங்களை 200,000க்கும் அதிகமான பயனாளிகளுக்கு விநியோகிக்கும் நோக்கோடு, இப்பேரீத்தம் பழங்களை,  KSrelief இடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சவூதி அரேபிய இராச்சியத்தின் மனிதாபிமான மற்றும் முன்னோடி பாத்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய இந்த தாராள நன்கொடைக்காக, இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ்  ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசரும்  பிரதம மந்திரியுமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ்  ஆல் சஊத் ஆகியோருக்கு தூதுவர் அல்கஹ்தானி அவர்கள் தனது நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தேவையுடையோர்களின் துன்பத்தைப் போக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்படும், இதுபோன்ற மனிதாபிமானத் திட்டங்களை செயல்படுத்துவதை நேரடியாக மேற்பார்வையிட்டு வரும் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்திற்கும் தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இது தொடர்பாக, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கெளரவ ஜெரார்ட் ரெபெல்லோ, “இந்தத் தாராளமான பங்களிப்பிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, சவூதி அரபிய இராச்சியமானது இவ் உலக உணவுத் திட்டத்திற்கு, மிகப் பெரிய நன்கொடை வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியா இராச்சியமும் ஒன்றாகும்” என்றார்.

இரண்டு புனிதத் தளங்களின் பாதுகாவலரின் அரசாங்கத்தால் உலகின் பல்வேறு சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கு அங்கு வாழும் மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்கு விநியோகிப்பதற்க்காக வழங்கும் உதவித் திட்டங்களுக்குள் இதுவும் உள்ளடங்கும்.