181 ஜனாஸாக்களே தகனம் செய்யப்பட்டன: நசீர் அஹமட்

181 ஜனாஸாக்களே தகனம் செய்யப்பட்டன: நசீர் அஹமட்

கொவிட்-19 இனால் உயிரிழந்தமையினால் தகனம் செய்யப்பட்டவர்களில் 181 பேரே முஸ்லிம்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.  

இதுவரை கொவிட்ட-19 இனால் உயிரிழந்துள்ள எத்தனை முஸ்லிம்கள் தகனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் வெளிவராத நிலையில், இந்த எண்ணிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், நேற்று (10) புதன்கிழமை பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

பாராளுமன்ற உரையின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை ஒரு கவலையான விடயம். இவ்வாறு நடந்திருக்க கூடாது. இவ்வாறான விடயங்கள் இனிமேலும்  நடக்கக் கூடாதென நாம் பிரார்த்திக்கின்றோம்.

கடந்த ஒரு வருட காலமாக முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்ட விடயத்தில் கவலைகள் ஏற்பட்டது மாத்திரமன்றி புரளிகளும்  கிளப்பப்பட்டன. அந்தப் புரளிகளுக்கு கடந்த 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக  அனுமதி வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்த விடயத்தில் உதவி புரிந்த முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பலருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக எமது நற்பெயரை களங்கப்படுத்திய   பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சபையில் இருக்கின்றார்கள்.

எங்களை மிகவும் கேவலமாக சித்தரித்தார்கள். நாம் இந்த அரசிற்கு  ஆதரவளித்ததனாலேயே ஜனாசாக்கள் எரிக்கப்படுவதாகவும் பழி சுமத்தினார்கள். பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.

இதுவரை கொரோணாவால் மரணித்த 497  பேரில் 334 பேர் முஸ்லிம்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடந்த 05 நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இது ஒரு பிழையான தகவலாகும். நிச்சயமாக அவ்வாறில்லை. எரிக்கப்பட்ட உடல்களில்  181 ஜனாசாக்களே முஸ்லிம்களுடையது. அதேவேளை பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் போது  இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அதிகரிக்கும் என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நாட்டிலே இவ்வாறான முரண்பாடுகள் இனிமேலும் உருவாகக் கூடாது. சிறிய சிறிய பிரச்சினைகளே பெரிய பிரச்சினைகளாகி இனங்கள், துருவயமயப்படுத்தப்பட்டு, கலவரங்கள் வெடிக்கின்றன. நாட்டிலே இனங்கள் தனித்தனியாக பிரிந்து சின்னாபின்னாமாகும் நிலை உருவாகின்றது" என்றார்.

ஊடக பிரிவு