விரைவில் ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு
விரைவில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய இந்த சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.
ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த பாதுகாப்பு ஒத்துழைப்பு உதவித் திட்டத்தில் இலங்கையையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இசொமதா அகியோ தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பிராந்தியத்தில் தேசிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து மேற்கொள்ளும் திட்டம் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதோடு அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் தூதுவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தெளிவுபடுத்தினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் விமான நிலைய முதலீடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பான் தூதரகத்தின் முதல் செயலாளர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்புப் பிரிவின் பிரதானி ஓஹாஷி கென்ஜி, ஜப்பான் தூதரகத்தின் முதல் செயலாளர் மற்றும் அரசியல் பிரிவு பிரதானி முரதா ஷினிசி ஆகியோர் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)